பக்கங்கள்

எனக்குள்ளே இருந்து அவ்வப்போது தலை காட்டும் இந்தக் கவிஞன், என்னிலிருந்து மாறுபட்டவன்! அதனால் தான் இது "அபியும் நானும்"!

Monday, July 5, 2010

யார் வந்தது கனவில்?



மீனுக்குட்டி  கனவில்

டோராதான் வந்தாளாம்!

பிரபு வாலு கனவில்

ஜாக்கிசானும் ஷேடோகானும்

அண்ணனின் கனவில்

அசினோ நயனோ!

பாட்டிக்கு

பல்செட் காணாமல்

போனதாகவும்

பின்னால் கிடைத்ததாகவும்

கனவு!

தாத்தாவுக்கு

பகலில் பீடியும்

இரவில் இருமலுமே

வாழ்வாகிப் போனதால்

கனவெல்லாம் கிடையாது!

அம்மாவுக்கு

அட்சய திதியில்

வாங்கிய நகை

குட்டி போடும் கனவு !

அப்பாவிடம்

கனவு பற்றி

கதைப்பதெல்லாம்

கனவுதான்...

அதுசரி

இத்தனை பேரின்

கனவையும்

எதற்காக

உன்னிடம் சொல்கிறேன்

என்றா கேட்கிறாய்?

இவ்வளவும் கேட்டுவிட்டு

என் கனவில்

யார் வந்தார்?

என்று நீ

கேட்காமலா போவாய்!

1 comments:

shahidha said...

எத்தனை கவித்துவம்!
எவ்வளவு அழகு....
ஏராள இனிமை...
ஏக்கமும் தான்?
இதை விட அழகாக,குறும்பாக,பிரியமாக காதலை சொல்லி விட முடியுமா?உள்ளம் கொள்ளை போகுதே!

Post a Comment