பக்கங்கள்

எனக்குள்ளே இருந்து அவ்வப்போது தலை காட்டும் இந்தக் கவிஞன், என்னிலிருந்து மாறுபட்டவன்! அதனால் தான் இது "அபியும் நானும்"!

Wednesday, July 28, 2010

ஒரு பூங்காவின் வரவு செலவு



ஒரு பட்டாம்பூச்சிதான்
அன்று
அந்தப் பூங்காவின்
முதல் வரவு!
மெல்ல மெல்ல 
 சிறகடித்து
தன் பட்டு இறக்கை
குவித்து விரித்து
முதல் பூவான
 ஊதாப் பூ மேல்
உட்கார்ந்தது!
அதன் நீலப் பொட்டு
சிறகிற்கும்
ஊதாப் பூவின்
நிறத்திற்கும்
ஒத்துப் போயிருக்கலாம்!


ஊதாப் பூவை
முகர்ந்தபடியே
சுற்றிலும் பார்த்தது
பட்டாம்பூச்சி!
தூரத்தில் இருந்து
பட்டாம்பூச்சியைப்
பார்த்தது
வெளிர் நிற ரோஜா!
வண்ண வண்ணமான
மலர்களுக்கிடையே
வண்ணமேயில்லாத
அந்த ரோஜாவை
ஆச்சர்யமாய் பார்த்தது
பட்டாம்பூச்சி!

மலர் விட்டு
மலர் தாவுதல்
குற்றமென்ற சட்டம்
அந்தப் பூங்காவில்
அமலில் இல்லை!
ஊதாப் பூ விட்டு
வெள்ளை ரோஜாவுக்கு
உடனே கூட
தாவியிருக்கலாம்........
ஆனாலும் அது
ஊதாப் பூவிலேயே
உட்கார்ந்திருந்தது!

அவ்வப்போது
வெள்ளை ரோஜாவும்
நிலச்சிறகு பட்டாம்பூச்சியும்
பார்வைப் பரிமாற்றம்
பலநூறு செய்தன!


ஒரு ரீங்காரம் ஒன்று
காற்றைக் கிழிக்க
கரிய வண்டொன்று
மௌனம் கலைத்தது!

கடைசியாய்...
பட்டாம் பூச்சி
அந்தப் பக்கம்
பார்க்கையில் - அது
வெள்ளை ரோஜா பக்கம்
போனதாய்த்தான்
அதற்கு ஞாபகம்!

அன்று
தோட்டத்தை விட்டு
 கடைசியாய்
காற்றில் போனது
நான்கைந்து
ரோஜா இதழ் சருகுகளும்
ஒரு நீலச் சிறகும் தான்!


கவிதை பிடித்திருந்தால் வாக்களிக்க : 

Monday, July 26, 2010

ஆயிரம் முகங்கள்!



காதலில் சொன்னால் வர்ணனை!

கவிதையில் சொன்னால் உவமை!

கதையில் சொன்னால் கற்பனை!

விளம்பரம் சொன்னால் விற்பனை!

கோர்ட்டில் சொன்னால் சாட்சி!

படத்தில் பார்த்தால் காட்சி!

அரசியல் சொன்னால் கொள்கை!

அலுவலில் சொன்னால் சாணக்யம்!

வீட்டில் சொன்னால் இல்லறம்!

பத்திரிக்கைக்கு சொன்னால் பேட்டி!

படாடோபத்துக்கு அணிந்தால் உடைகள்!

எல்லையில் குவித்தால் படைகள்!

முகத்தில் பூசினால் பூச்சு!

மேடையில் சொன்னால் பேச்சு!

பொய்முகம் தெரியும்!

ஆனால், இங்கே

பொய்யின் முகங்கள்

ஆயிரம் ஆயிரம்!

Wednesday, July 21, 2010

இனிய சகாப்தம்



 இது

இனிய சகாப்தம்!

இனிதே நிறைவேறட்டும்!



உன் கண்கள்

அனுப்பிய கடிதங்கள்

என்னை நோக்கி

முகவரி தவறி வந்ததோ  - என்

முகத்தை நோக்கித்தான் வந்ததோ!

தெரியாத போதிலும் - அந்தக்

கடிதங்களின் மீதே - என்

விடியலின் நம்பிக்கைகள்!



காதல் என்ற

கண்ணாமூச்சி விளையாட்டில்

உன் வார்த்தைகளுக்குள்

ஒளிந்திருந்த

அர்த்தங்களைக் கண்டுபிடித்துவிட்டேன்!



ஆனால்

ஒளித்து வைத்தது

நீயா விதியா

என்றுதான் தெரியவில்லை!

ஆனாலும்..

உனக்குள்  ஒளிந்திருக்கும்

என்னை நீ

எப்போது கண்டுபிடிப்பாய்

என்ற

ஏக்கத்தில் நான்!


நீ

காட்டிய கரிசனங்கள்

காதலே! நட்பே! என்று

எனக்குள் நான்

எத்தனையோ

பட்டி மண்டபங்கள்

நடத்திப் பார்த்தாலும்

என் மனம் விரும்புவது

உன் மன மன்றத்தைத் தானே!


நாம்

சேர்ந்திருந்த பொழுதுகளின்

செழுமையான நினைவுகள்

கடற்கரை அலைகளாய்

என் மனகரையை முட்டி மோத

கடலான உன்னில்

கௌரவ மீனவனாய் நான்!

மீன் பிடிக்க வரவில்லை - உனில்

மூழ்குவதற்கு வந்திருக்கிறேன்!


இது இனிய சகாப்தம்!

இனிதே நிறைவேறட்டும்!

கூரை




நீ மொட்டு விட்டு
மலரான நேரம் - வீட்டுல
தீ மூட்ட வழியில்ல ! ஆனா
இன்னும் ஒரு பாரம்!


முப்பது வயசு கிட்ட
மூத்தவ காத்திருக்கா!
இருவது வயசு தாண்டி
இளையவ இங்கிருக்கா!
பதினாலு வயசிலயே
பருவம் வந்து சேந்துட்டியே!
எரியுற என் வயித்தில்
எண்ணைய ஊத்திட்டயே!

பலகாரம் செஞ்சிடவே
காசில்லாத நேரத்துல - ஒனக்கு
அலங்காரம் செஞ்சு வக்க
ஆத்தா நான் எங்க போவேன்?
கூரையில மழைத்தண்ணி
தெனம் ஒழுகப் பாத்த வீட்டில்
ஒனக்குன்னு ஒரு கூரை
ஒதுக்க நானும் எங்க போவேன்?

முன்ன ரெண்ட தேத்திடவே
முடியாம போன வீட்டில்
பின்னவளும் சேந்திருக்கா
அப்படின்னா அழைப்பு வைப்பேன்!
அடுத்த வேள சமச்சிடவே
அடுப்பெரியா வீட்டுக்குள்ள
அடுத்தவளும் சமஞ்சுபுட்டா
அப்படின்னா அழைப்பு வப்பேன்?

ஒங்க அப்பன் குடிச்ச தண்ணி
ஒலகத்துக்கே கடன் வைக்க
ஒனக்கு இப்ப மஞ்சத்தண்ணி
ஊத்த நானும் எங்க போவேன்?
பந்தலுக்கு காத்திருக்கா
பாவிமக ரெண்டு பேரும்
கூர வச்சுக் கொண்டாட
கூடலயே எம்மனசும்!

பருவம் வந்த சேதிய
இப்பதிக்கு மறச்சிருவோம்!
 விடியும் தேதி வந்து சேரும் - அப்ப
விஷயத்த வெளிய சொல்வோம்!

Monday, July 19, 2010

கலியாணம் முடிச்சாச்சி!




கைகளிலும் தூக்காமல்

கழற்றியும் எறியாமல்

கால்களை பக்கம் சாய்த்து

கால்விரல் தரை தேய்த்து

எத்தி எத்தி

தத்தி தத்தி

பிய்ந்த செருப்போடு

சப்பாணி நடைபோட்டான்

எங்கள் ஊர் மாடசாமி!


எதிர்வந்த பெருமாள்

சட்டென கேட்டான்

" தச்சித்தான் போட்டாலென்ன

தலையா போகும்?!"

"எனக்கு கண்ணாலம் ஆகி

ஏழெட்டு வருஷமாச்சி!"

அசட்டுச் சிரிப்போடு

மாடசாமி சொல்ல

நமட்டுச் சிரிப்போடு

புரிந்ததாய்

புன்னகைத்தான்

பேச்சுதந்த பெருமாள்!

கல்யாணம் ஆகாத

எனக்கு மட்டும் தான்

எதுவும் புரியவில்லை!

Saturday, July 17, 2010

கவிதையும் காதலும்



ஒரு விதை

கவிதையாவதைப்

போலத்தான்

ஒரு பார்வை

காதலாகிறது!



எழுத்து

ஒவ்வொன்றும்

எங்கிருந்தோ வந்து

காகிதத்தில்

விழுவது போல்

எங்கிருந்தோ

புறப்பட்டு

இதயம் நகர்கிறது

காதல் உணர்வு!



ஒவ்வொரு வாக்கியமும்

படிக்கப் படிக்க

கவிதா உலகுக்கு

இடம் பெயரும் ரசிகன்போல்

காதலின்

ஒவ்வொரு

படிக்கட்டிலும்

இடறி இடறி

சொர்க்கம் நோக்கி

புலம் பெயருகின்றனர்

காதலர்கள்!




கவிதையில்

புதுமையும் மரபும்

கலந்தே குழைவதைப்போல்

காதலும் கூட

முரணின் உருவம்தான்!



கவிதை

ரசிக்கத்தக்கது!

காதலும்தான்!

கவிதை

வியக்கத்தக்கது!

காதலும்தான்!

கவிதை வெட்கப்படும்!

காதலும் தான்!

கவிதை துக்கப்படும்!

காதலும்தான்!



ஆனாலும்

கவிதையும் காதலும்

வேறு வேறுதான்!


கவிதை படித்தால்

முடிந்துவிடும்!

 காதலித்தால்

காதல் முடியுமா.........?

Friday, July 16, 2010

அடையாளம்


விரல் நுனி ரேகைகள்

நுழைபவன் அடையாளம்!

இதழ் நுனி இளிப்புகள்

குழைபவன் அடையாளம்!



உருகும் பனிப்போர்வை

உதித்ததின் அடையாளம்!

புரிதலும் புன்னகையும்

மனிதத்தின் அடையாளம்!



அருகாமை நாடல்கள்

அன்பின் அடையாளம்!

நெருடாத ஊடல்கள்

நேசத்தின் அடையாளம்!



புரிகின்ற பொருளெல்லாம்

படைப்பின் அடையாளம்!

புரியாத புதிர்களெல்லாம்

படைத்தவன் அடையாளம்!

நானும் நடிகனே




விழிகளின் வளைவினில்

விழுந்து புறப்பட்ட துளிகள்

விதையாகிப் பின்

விருட்சமாக....

மேகங்களுக்கிடையில்

சிக்குண்ட வானவில்

சின்னதாய்க் காட்டும்

சாயம்போன சாயல்

எனக்குள்ளும் ஊற...

கைக்குட்டை உதவியில்

கலக்கங்கள் துடைத்து

புன்னகை வில்லை

நாண் போட்டு வளைக்கும்

நானும் நடிகனே!

Wednesday, July 14, 2010

பயணம்




உதிரும் இலைகளைப் பார்த்து

மரம் கேட்டது

'என்னை விட்டு

எங்கே போகிறீர்கள் என"



இலைகள் சொல்லின

"நீயல்லவா எங்களை விட்டு

போய்க்கொண்டிருக்கிறாய்!"



பெய்யும் மழைத்துளி பார்த்து

மேகம் கேட்டது

"என்னை விட்டு

எங்கே பொகிறீர்கள் என!"



மழைத்துளிகள் சொல்லின

"நீயல்லவா எங்களை விட்டு

போய்க் கொண்டிருக்கிறாய்!"




ஓடும் நொடிகளைப் பார்த்து

மனிதன் கேட்டான்

'என்னை விட்டு

எங்கே போய்க் கொண்டிருக்கிறீர்கள்" என!

Friday, July 9, 2010

காணாமல் போன கனவுகள்



காணாமல் போன

என் கனவுகளை

யாரேனும்

கண்டெடுத்தால்

அதை

கண்ட இடத்திலேயே

போட்டு விடுங்கள்!

அவை

திருவிழாவில்

தொலைந்த குழநதைபோல்

பெற்ற என்னிடம்

வரத்  துடிக்கும்!

ஆனாலும்

நீங்கள்

அவற்றை

என்னிடம்

சேர்க்காதீர்கள்!

நான்

நிஜமாக்க

முடியாத

கனவுகள் எல்லாம்

மனைவியாக்காத

காதலிகள் போல!

உங்களிடம்

குழந்தை போல்

அழும் கனவுகள்

என்னிடம்

மறந்த காதலியாய்

கேள்வி கேட்கும்!

அதனால்...

கனவுகள்

தொலைந்தே போகட்டும்!

கனவுகளை

கண்ட

இடத்திலேயே

விட்டு விடுங்கள்!

Wednesday, July 7, 2010

முடிவு



எவ்வளவோ

சோதனை வந்தும்

இறுதியில்

நல்லவனே ஜெயித்தான்!

பணபலம் இருந்தாலும் கூட

லஞ்சம் வாங்கிய

மந்திரி சிறை சென்றார்!

காதலர் இருவரும்

இனிதே இணைந்தனர்!

கெட்டவன் அழிந்ததால்

ஊருக்கே மகிழ்ச்சி!

எதிர்பார்த்த

முடிவுதான்!

ஆனாலும்

ஏகோபித்த

வரவேற்பு!

"சுபம்" என்ற

வார்த்தை பார்த்து

திரையை விட்டு

கண்ணெடுத்தான்

சாமானியன்!

வெளியே

நிஜ உலகம்

எதிர்பாரா முடிவுகளுடன்

அவனுக்காக

காத்திருந்தது!

நடுமுள்



அந்தப் பக்கம்

சுழல்கிற கோள்களூம்

நகர்கிற சதுரங்களுமாய்

மாற்றி வைத்தன

வாழ்க்கையை!

இந்தப் பக்கம்

ஒன்பது சுற்றுகளும்

பரிகாரங்களுமாய்

ஏற்றி வைத்தன

வாழ்க்கையை!

ஏற்ற இறக்கங்கள்

பாவங்களிலும்

பரிகாரங்களிலும்

எப்படியோ

நடுமுள் தொட

பாவம்...

ஏறி

இறங்கிய

மனிதன் தான்

கட்டங்களுக்கும்

சட்டங்களுக்கும்

நடுவில்....

ஆடிக் கொண்டே...

வாழ்க்கையின்

நடுமுள் மட்டும்

நழுவிக் கொண்டே...

Monday, July 5, 2010

யார் வந்தது கனவில்?



மீனுக்குட்டி  கனவில்

டோராதான் வந்தாளாம்!

பிரபு வாலு கனவில்

ஜாக்கிசானும் ஷேடோகானும்

அண்ணனின் கனவில்

அசினோ நயனோ!

பாட்டிக்கு

பல்செட் காணாமல்

போனதாகவும்

பின்னால் கிடைத்ததாகவும்

கனவு!

தாத்தாவுக்கு

பகலில் பீடியும்

இரவில் இருமலுமே

வாழ்வாகிப் போனதால்

கனவெல்லாம் கிடையாது!

அம்மாவுக்கு

அட்சய திதியில்

வாங்கிய நகை

குட்டி போடும் கனவு !

அப்பாவிடம்

கனவு பற்றி

கதைப்பதெல்லாம்

கனவுதான்...

அதுசரி

இத்தனை பேரின்

கனவையும்

எதற்காக

உன்னிடம் சொல்கிறேன்

என்றா கேட்கிறாய்?

இவ்வளவும் கேட்டுவிட்டு

என் கனவில்

யார் வந்தார்?

என்று நீ

கேட்காமலா போவாய்!

சொல்லப் போனால்



சொன்னதையே

சொல்லிக் கொண்டிருந்த

குழந்தையும்...

சொல்லாததை

கடைசி வரை

சொல்லாத

பெரிசுகளும்

சொல்லக் கூடாததை

சொல்லி...

சொல்ல வேண்டியதை மறந்த

இளசுகளும்....

இப்படி

சொன்னதும்

சொல்லாததுமாய்

சொல்லாமலே

ஓடிய நொடிகளில்

கரைந்தது

சொல்லிக் கொள்ளும்படியான

விசேஷம்

ஏதுமற்ற வாழ்க்கை!

பார்வை



கண்ணைக் கசக்கி

கைக்குட்டையை

ஈரப்படுத்தி

கண்ணிலிருந்த

அத்தனை தூசியும்

அகற்றி

கண்களை இடுக்கி

உற்று நோக்கியபின்

தெளிவாய்த் தெரிந்தது....

எனக்கு

ஒன்றுமே

தெரியவில்லையென்று!

Thursday, July 1, 2010

பொய்யாவது சொல்

பொய்யாவது சொல்

என்னைக் காதலிக்கிறாய் என்று!

சொல்லியாகிவிட்டதா?

சரி!

என்னது

சொன்னது பொய்யா?

அதெல்லாம்

கிடையாது!

ஆட்டத்தின் விதி

மாறிவிட்டது!

சொன்னது சொன்னதுதான்!

வா, காதலிக்கலாம்!

வானப் பலகை

நல்ல வேளை

அருகில் இல்லை

வானம்!

தொடுவானம் கூட

தொட முடிவதில்லை!

இல்லையென்றால்

வானப்பலகையிலும்

விளம்பரம்

எழுதியிருக்கும்

இந்த

விற்பனைக் கூட்டம்!

கிணற்றுத் தவளை

தத்துவம்

வாழ்வியல் என்று

தாவித் தாவி பார்த்தாலும்

உன் ஒரே

பார்வை

மழைத் துளியில்

மீண்டும்

காதல் கிணற்றிலேயே

விழுந்து விடுகிறது

என்

கவிதைத் தவளை!