Showing posts with label tamil philosophy. Show all posts
Showing posts with label tamil philosophy. Show all posts
Monday, July 19, 2010
கலியாணம் முடிச்சாச்சி!
கைகளிலும் தூக்காமல்
கழற்றியும் எறியாமல்
கால்களை பக்கம் சாய்த்து
கால்விரல் தரை தேய்த்து
எத்தி எத்தி
தத்தி தத்தி
பிய்ந்த செருப்போடு
சப்பாணி நடைபோட்டான்
எங்கள் ஊர் மாடசாமி!
எதிர்வந்த பெருமாள்
சட்டென கேட்டான்
" தச்சித்தான் போட்டாலென்ன
தலையா போகும்?!"
"எனக்கு கண்ணாலம் ஆகி
ஏழெட்டு வருஷமாச்சி!"
அசட்டுச் சிரிப்போடு
மாடசாமி சொல்ல
நமட்டுச் சிரிப்போடு
புரிந்ததாய்
புன்னகைத்தான்
பேச்சுதந்த பெருமாள்!
கல்யாணம் ஆகாத
எனக்கு மட்டும் தான்
எதுவும் புரியவில்லை!
Friday, July 16, 2010
அடையாளம்
விரல் நுனி ரேகைகள்
நுழைபவன் அடையாளம்!
இதழ் நுனி இளிப்புகள்
குழைபவன் அடையாளம்!
உருகும் பனிப்போர்வை
உதித்ததின் அடையாளம்!
புரிதலும் புன்னகையும்
மனிதத்தின் அடையாளம்!
அருகாமை நாடல்கள்
அன்பின் அடையாளம்!
நெருடாத ஊடல்கள்
நேசத்தின் அடையாளம்!
புரிகின்ற பொருளெல்லாம்
படைப்பின் அடையாளம்!
புரியாத புதிர்களெல்லாம்
படைத்தவன் அடையாளம்!
நானும் நடிகனே
விழிகளின் வளைவினில்
விழுந்து புறப்பட்ட துளிகள்
விதையாகிப் பின்
விருட்சமாக....
மேகங்களுக்கிடையில்
சிக்குண்ட வானவில்
சின்னதாய்க் காட்டும்
சாயம்போன சாயல்
எனக்குள்ளும் ஊற...
கைக்குட்டை உதவியில்
கலக்கங்கள் துடைத்து
புன்னகை வில்லை
நாண் போட்டு வளைக்கும்
நானும் நடிகனே!
Wednesday, July 14, 2010
பயணம்
உதிரும் இலைகளைப் பார்த்து
மரம் கேட்டது
'என்னை விட்டு
எங்கே போகிறீர்கள் என"
இலைகள் சொல்லின
"நீயல்லவா எங்களை விட்டு
போய்க்கொண்டிருக்கிறாய்!"
பெய்யும் மழைத்துளி பார்த்து
மேகம் கேட்டது
"என்னை விட்டு
எங்கே பொகிறீர்கள் என!"
மழைத்துளிகள் சொல்லின
"நீயல்லவா எங்களை விட்டு
போய்க் கொண்டிருக்கிறாய்!"
ஓடும் நொடிகளைப் பார்த்து
மனிதன் கேட்டான்
'என்னை விட்டு
எங்கே போய்க் கொண்டிருக்கிறீர்கள்" என!
Wednesday, July 7, 2010
முடிவு
எவ்வளவோ
சோதனை வந்தும்
இறுதியில்
நல்லவனே ஜெயித்தான்!
பணபலம் இருந்தாலும் கூட
லஞ்சம் வாங்கிய
மந்திரி சிறை சென்றார்!
காதலர் இருவரும்
இனிதே இணைந்தனர்!
கெட்டவன் அழிந்ததால்
ஊருக்கே மகிழ்ச்சி!
எதிர்பார்த்த
முடிவுதான்!
ஆனாலும்
ஏகோபித்த
வரவேற்பு!
"சுபம்" என்ற
வார்த்தை பார்த்து
திரையை விட்டு
கண்ணெடுத்தான்
சாமானியன்!
வெளியே
நிஜ உலகம்
எதிர்பாரா முடிவுகளுடன்
அவனுக்காக
காத்திருந்தது!
நடுமுள்
அந்தப் பக்கம்
சுழல்கிற கோள்களூம்
நகர்கிற சதுரங்களுமாய்
மாற்றி வைத்தன
வாழ்க்கையை!
இந்தப் பக்கம்
ஒன்பது சுற்றுகளும்
பரிகாரங்களுமாய்
ஏற்றி வைத்தன
வாழ்க்கையை!
ஏற்ற இறக்கங்கள்
பாவங்களிலும்
பரிகாரங்களிலும்
எப்படியோ
நடுமுள் தொட
பாவம்...
ஏறி
இறங்கிய
மனிதன் தான்
கட்டங்களுக்கும்
சட்டங்களுக்கும்
நடுவில்....
ஆடிக் கொண்டே...
வாழ்க்கையின்
நடுமுள் மட்டும்
நழுவிக் கொண்டே...
Monday, July 5, 2010
சொல்லப் போனால்
Monday, June 14, 2010
தொலைந்த சந்தோஷங்கள் திரும்பக் கிடைக்கும்!
"தொலைந்த சந்தோஷங்கள்
திரும்பக் கிடைக்கும்!"
விளமபரம் பார்த்து
விரைந்து ஓடினேன்!
சொன்ன இடத்தில்
கடை விரித்திருந்தார்!
அகன்ற அறையில்
ஆயிரம் விளக்குகள்!
அதனடியில் கிடந்தன
தொலைந்த சந்தோஷங்கள்!
பிரபல இதழில்
விளம்பரம் தந்ததால்
கூட்டத்துக்கோ குறைவில்லை!
தெரிந்த தலைகளில் - எனக்குத்
தெரிந்த தலைகளும் அடக்கம்!
என் நண்பரும் உறவுகளும் கூட
தேடிக் கொண்டிருந்தனர்!
என் சந்தோஷத்தை
தேட வந்திருப்பாரோ?
ஒரு கணம் யோசித்து
ஓரக் கண்ணால் பார்த்தேன்!
தத்தம் சந்தோஷத்தை
தேடிக் கொண்டிருந்தனர்!
நானும் இறங்கித்
தேடத் தொடங்க்கினேன்!
என் சந்தோஷம் தவிர
என்னென்னவோ கிடைத்தது!
மற்றவர் சந்தோஷம்
தம் கையில் கிடைத்தால்
அதை மீண்டும் வீசிவிட்டு
தேடல் தொடர்ந்தனர்!
சந்தோஷம் கிடைத்தாலும்
கிடைக்காவிட்டாலும்
தேடுதல் நேரத்தைப் பொறுத்தே
அவரவர் கட்டணம்!
மாலை வரை தேடி
மன்றம் களைத்தது!
மணி அடித்தவுடன்
கூட்டம் கலைந்தது!
ஒருவருக்கு கூட -
தம் சந்தோஷம் கிடைக்கவில்லை!
கிடைத்ததெல்லாம்
எல்லாருமே என்போல்
சந்தோஷம் தொலைத்த
சாமானியர் தான் என்ற
சந்தோஷம் மட்டுமே!
திரும்பக் கிடைக்கும்!"
விளமபரம் பார்த்து
விரைந்து ஓடினேன்!
சொன்ன இடத்தில்
கடை விரித்திருந்தார்!
அகன்ற அறையில்
ஆயிரம் விளக்குகள்!
அதனடியில் கிடந்தன
தொலைந்த சந்தோஷங்கள்!
பிரபல இதழில்
விளம்பரம் தந்ததால்
கூட்டத்துக்கோ குறைவில்லை!
தெரிந்த தலைகளில் - எனக்குத்
தெரிந்த தலைகளும் அடக்கம்!
என் நண்பரும் உறவுகளும் கூட
தேடிக் கொண்டிருந்தனர்!
என் சந்தோஷத்தை
தேட வந்திருப்பாரோ?
ஒரு கணம் யோசித்து
ஓரக் கண்ணால் பார்த்தேன்!
தத்தம் சந்தோஷத்தை
தேடிக் கொண்டிருந்தனர்!
நானும் இறங்கித்
தேடத் தொடங்க்கினேன்!
என் சந்தோஷம் தவிர
என்னென்னவோ கிடைத்தது!
மற்றவர் சந்தோஷம்
தம் கையில் கிடைத்தால்
அதை மீண்டும் வீசிவிட்டு
தேடல் தொடர்ந்தனர்!
சந்தோஷம் கிடைத்தாலும்
கிடைக்காவிட்டாலும்
தேடுதல் நேரத்தைப் பொறுத்தே
அவரவர் கட்டணம்!
மாலை வரை தேடி
மன்றம் களைத்தது!
மணி அடித்தவுடன்
கூட்டம் கலைந்தது!
ஒருவருக்கு கூட -
தம் சந்தோஷம் கிடைக்கவில்லை!
கிடைத்ததெல்லாம்
எல்லாருமே என்போல்
சந்தோஷம் தொலைத்த
சாமானியர் தான் என்ற
சந்தோஷம் மட்டுமே!
Subscribe to:
Posts (Atom)


