பக்கங்கள்

எனக்குள்ளே இருந்து அவ்வப்போது தலை காட்டும் இந்தக் கவிஞன், என்னிலிருந்து மாறுபட்டவன்! அதனால் தான் இது "அபியும் நானும்"!

Showing posts with label tamil romantic poetry. Show all posts
Showing posts with label tamil romantic poetry. Show all posts

Wednesday, July 21, 2010

இனிய சகாப்தம்



 இது

இனிய சகாப்தம்!

இனிதே நிறைவேறட்டும்!



உன் கண்கள்

அனுப்பிய கடிதங்கள்

என்னை நோக்கி

முகவரி தவறி வந்ததோ  - என்

முகத்தை நோக்கித்தான் வந்ததோ!

தெரியாத போதிலும் - அந்தக்

கடிதங்களின் மீதே - என்

விடியலின் நம்பிக்கைகள்!



காதல் என்ற

கண்ணாமூச்சி விளையாட்டில்

உன் வார்த்தைகளுக்குள்

ஒளிந்திருந்த

அர்த்தங்களைக் கண்டுபிடித்துவிட்டேன்!



ஆனால்

ஒளித்து வைத்தது

நீயா விதியா

என்றுதான் தெரியவில்லை!

ஆனாலும்..

உனக்குள்  ஒளிந்திருக்கும்

என்னை நீ

எப்போது கண்டுபிடிப்பாய்

என்ற

ஏக்கத்தில் நான்!


நீ

காட்டிய கரிசனங்கள்

காதலே! நட்பே! என்று

எனக்குள் நான்

எத்தனையோ

பட்டி மண்டபங்கள்

நடத்திப் பார்த்தாலும்

என் மனம் விரும்புவது

உன் மன மன்றத்தைத் தானே!


நாம்

சேர்ந்திருந்த பொழுதுகளின்

செழுமையான நினைவுகள்

கடற்கரை அலைகளாய்

என் மனகரையை முட்டி மோத

கடலான உன்னில்

கௌரவ மீனவனாய் நான்!

மீன் பிடிக்க வரவில்லை - உனில்

மூழ்குவதற்கு வந்திருக்கிறேன்!


இது இனிய சகாப்தம்!

இனிதே நிறைவேறட்டும்!

Saturday, July 17, 2010

கவிதையும் காதலும்



ஒரு விதை

கவிதையாவதைப்

போலத்தான்

ஒரு பார்வை

காதலாகிறது!



எழுத்து

ஒவ்வொன்றும்

எங்கிருந்தோ வந்து

காகிதத்தில்

விழுவது போல்

எங்கிருந்தோ

புறப்பட்டு

இதயம் நகர்கிறது

காதல் உணர்வு!



ஒவ்வொரு வாக்கியமும்

படிக்கப் படிக்க

கவிதா உலகுக்கு

இடம் பெயரும் ரசிகன்போல்

காதலின்

ஒவ்வொரு

படிக்கட்டிலும்

இடறி இடறி

சொர்க்கம் நோக்கி

புலம் பெயருகின்றனர்

காதலர்கள்!




கவிதையில்

புதுமையும் மரபும்

கலந்தே குழைவதைப்போல்

காதலும் கூட

முரணின் உருவம்தான்!



கவிதை

ரசிக்கத்தக்கது!

காதலும்தான்!

கவிதை

வியக்கத்தக்கது!

காதலும்தான்!

கவிதை வெட்கப்படும்!

காதலும் தான்!

கவிதை துக்கப்படும்!

காதலும்தான்!



ஆனாலும்

கவிதையும் காதலும்

வேறு வேறுதான்!


கவிதை படித்தால்

முடிந்துவிடும்!

 காதலித்தால்

காதல் முடியுமா.........?

Monday, July 5, 2010

யார் வந்தது கனவில்?



மீனுக்குட்டி  கனவில்

டோராதான் வந்தாளாம்!

பிரபு வாலு கனவில்

ஜாக்கிசானும் ஷேடோகானும்

அண்ணனின் கனவில்

அசினோ நயனோ!

பாட்டிக்கு

பல்செட் காணாமல்

போனதாகவும்

பின்னால் கிடைத்ததாகவும்

கனவு!

தாத்தாவுக்கு

பகலில் பீடியும்

இரவில் இருமலுமே

வாழ்வாகிப் போனதால்

கனவெல்லாம் கிடையாது!

அம்மாவுக்கு

அட்சய திதியில்

வாங்கிய நகை

குட்டி போடும் கனவு !

அப்பாவிடம்

கனவு பற்றி

கதைப்பதெல்லாம்

கனவுதான்...

அதுசரி

இத்தனை பேரின்

கனவையும்

எதற்காக

உன்னிடம் சொல்கிறேன்

என்றா கேட்கிறாய்?

இவ்வளவும் கேட்டுவிட்டு

என் கனவில்

யார் வந்தார்?

என்று நீ

கேட்காமலா போவாய்!

Thursday, July 1, 2010

வானப் பலகை

நல்ல வேளை

அருகில் இல்லை

வானம்!

தொடுவானம் கூட

தொட முடிவதில்லை!

இல்லையென்றால்

வானப்பலகையிலும்

விளம்பரம்

எழுதியிருக்கும்

இந்த

விற்பனைக் கூட்டம்!

Thursday, June 10, 2010

என்ன செய்யப் போகிறேன்!

ஒரு பூ கேட்டாய்!
பூங்கொத்தே கொடுத்தேன்!
ஒரு புடவை கேட்டாய்!
உன் வார்ட்ரோபை நிறைத்தேன்!

எப்போதாவது
நேரம் கிடைத்தால்
செல்ஃபோனில் அழையென்றாய்!
ஆயிரங்களில் பில் கட்டினேன்!
எனக்குப் புரியாத
ஜோக் சொல்லி
புன்னகை செய் எனறாய் - நான்
புரண்டு விழுந்து சிரித்தேன்!

அலுவலகத்தில்
நீ இல்லாத போது
உன் இருக்கையையும்
கொஞ்சம் பார்த்துக் கொள் என்றாய்!
நீ இல்லாத போதும்
நீ இருக்கும் போதும்
என் இருக்கை கூட பாராமல்
உன் இருக்கை மட்டுமே பார்த்தேன்!

கண்ணதாசன் கவிதை
ஒன்றேயொன்று சொல் என்றாய்!
சினிமா பாட்டிலிருந்து
அர்த்தமுள்ள இந்துமதம் வரை
அவரின் உயில் தவிர
அவர் எழுதிய
அனைத்தும் பரிசளித்தேன்!

இப்படி
நீ எதைக் கேட்டாலும்
அதிகமாகத் தந்தே
பழகி விட்டேன்!
இன்று
ஒரே ஒரு
முத்தம் கேட்டிருக்கிறாய்...
என்ன செய்யப் போகிறேன்?!