பக்கங்கள்

எனக்குள்ளே இருந்து அவ்வப்போது தலை காட்டும் இந்தக் கவிஞன், என்னிலிருந்து மாறுபட்டவன்! அதனால் தான் இது "அபியும் நானும்"!

Showing posts with label தேடல். Show all posts
Showing posts with label தேடல். Show all posts

Friday, July 16, 2010

அடையாளம்


விரல் நுனி ரேகைகள்

நுழைபவன் அடையாளம்!

இதழ் நுனி இளிப்புகள்

குழைபவன் அடையாளம்!



உருகும் பனிப்போர்வை

உதித்ததின் அடையாளம்!

புரிதலும் புன்னகையும்

மனிதத்தின் அடையாளம்!



அருகாமை நாடல்கள்

அன்பின் அடையாளம்!

நெருடாத ஊடல்கள்

நேசத்தின் அடையாளம்!



புரிகின்ற பொருளெல்லாம்

படைப்பின் அடையாளம்!

புரியாத புதிர்களெல்லாம்

படைத்தவன் அடையாளம்!

Wednesday, July 14, 2010

பயணம்




உதிரும் இலைகளைப் பார்த்து

மரம் கேட்டது

'என்னை விட்டு

எங்கே போகிறீர்கள் என"



இலைகள் சொல்லின

"நீயல்லவா எங்களை விட்டு

போய்க்கொண்டிருக்கிறாய்!"



பெய்யும் மழைத்துளி பார்த்து

மேகம் கேட்டது

"என்னை விட்டு

எங்கே பொகிறீர்கள் என!"



மழைத்துளிகள் சொல்லின

"நீயல்லவா எங்களை விட்டு

போய்க் கொண்டிருக்கிறாய்!"




ஓடும் நொடிகளைப் பார்த்து

மனிதன் கேட்டான்

'என்னை விட்டு

எங்கே போய்க் கொண்டிருக்கிறீர்கள்" என!

Friday, July 9, 2010

காணாமல் போன கனவுகள்



காணாமல் போன

என் கனவுகளை

யாரேனும்

கண்டெடுத்தால்

அதை

கண்ட இடத்திலேயே

போட்டு விடுங்கள்!

அவை

திருவிழாவில்

தொலைந்த குழநதைபோல்

பெற்ற என்னிடம்

வரத்  துடிக்கும்!

ஆனாலும்

நீங்கள்

அவற்றை

என்னிடம்

சேர்க்காதீர்கள்!

நான்

நிஜமாக்க

முடியாத

கனவுகள் எல்லாம்

மனைவியாக்காத

காதலிகள் போல!

உங்களிடம்

குழந்தை போல்

அழும் கனவுகள்

என்னிடம்

மறந்த காதலியாய்

கேள்வி கேட்கும்!

அதனால்...

கனவுகள்

தொலைந்தே போகட்டும்!

கனவுகளை

கண்ட

இடத்திலேயே

விட்டு விடுங்கள்!

Wednesday, July 7, 2010

நடுமுள்



அந்தப் பக்கம்

சுழல்கிற கோள்களூம்

நகர்கிற சதுரங்களுமாய்

மாற்றி வைத்தன

வாழ்க்கையை!

இந்தப் பக்கம்

ஒன்பது சுற்றுகளும்

பரிகாரங்களுமாய்

ஏற்றி வைத்தன

வாழ்க்கையை!

ஏற்ற இறக்கங்கள்

பாவங்களிலும்

பரிகாரங்களிலும்

எப்படியோ

நடுமுள் தொட

பாவம்...

ஏறி

இறங்கிய

மனிதன் தான்

கட்டங்களுக்கும்

சட்டங்களுக்கும்

நடுவில்....

ஆடிக் கொண்டே...

வாழ்க்கையின்

நடுமுள் மட்டும்

நழுவிக் கொண்டே...

Monday, July 5, 2010

பார்வை



கண்ணைக் கசக்கி

கைக்குட்டையை

ஈரப்படுத்தி

கண்ணிலிருந்த

அத்தனை தூசியும்

அகற்றி

கண்களை இடுக்கி

உற்று நோக்கியபின்

தெளிவாய்த் தெரிந்தது....

எனக்கு

ஒன்றுமே

தெரியவில்லையென்று!

Tuesday, June 29, 2010

சும்மா கிடந்த சங்கு

"சும்மா கிடந்த

சங்கை

ஊதிக் கெடுப்பானேன்!"

நண்பன் கேட்டதும்

ஊத வந்தவன்

ஊதாமல் விலகினான்!

கேட்டவனைப் பார்த்து

சங்கு கேட்டது...

" ஊத வேண்டிய

சங்கை

சும்மா கெடுப்பதேன்?

மீட்டாத வீணையென்றால்

வாடும் கூட்டமே!

ஊதாத சங்கு மட்டும்

உமக்கு ஊறுகாயோ?"

Saturday, June 26, 2010

உண்மை சுடுமா?

உண்மை சுடுமாம்!

எல்லாரும் சொன்னார்கள்!

ஆனால்

ஒருமுறை கூட

உண்மை சுட்டு

நான் பார்த்ததேயில்லை!

காந்தி முதல்

பிரசுரிக்கும்

காகிதம் வரை

உண்மை...

சுடப்பட்டல்லவா

செத்துக் கொண்டிருக்கிறது!

Monday, June 14, 2010

தொலைந்த சந்தோஷங்கள் திரும்பக் கிடைக்கும்!

"தொலைந்த சந்தோஷங்கள்

திரும்பக் கிடைக்கும்!"

விளமபரம் பார்த்து

விரைந்து ஓடினேன்!

சொன்ன இடத்தில்

கடை விரித்திருந்தார்!

அகன்ற அறையில்

ஆயிரம் விளக்குகள்!

அதனடியில் கிடந்தன

தொலைந்த சந்தோஷங்கள்!

பிரபல இதழில்

விளம்பரம் தந்ததால்

கூட்டத்துக்கோ குறைவில்லை!

தெரிந்த தலைகளில் - எனக்குத்

தெரிந்த தலைகளும் அடக்கம்!

என் நண்பரும் உறவுகளும் கூட

தேடிக் கொண்டிருந்தனர்!

என் சந்தோஷத்தை

தேட வந்திருப்பாரோ?

ஒரு கணம் யோசித்து

ஓரக் கண்ணால் பார்த்தேன்!

தத்தம் சந்தோஷத்தை

தேடிக் கொண்டிருந்தனர்!

நானும் இறங்கித்

தேடத் தொடங்க்கினேன்!

என் சந்தோஷம் தவிர

என்னென்னவோ கிடைத்தது!

மற்றவர் சந்தோஷம்

தம் கையில் கிடைத்தால்

அதை மீண்டும் வீசிவிட்டு

தேடல் தொடர்ந்தனர்!

சந்தோஷம் கிடைத்தாலும்

கிடைக்காவிட்டாலும்

தேடுதல் நேரத்தைப் பொறுத்தே

அவரவர் கட்டணம்!

மாலை வரை தேடி

மன்றம் களைத்தது!

மணி அடித்தவுடன்

கூட்டம் கலைந்தது!

ஒருவருக்கு கூட -

தம் சந்தோஷம் கிடைக்கவில்லை!

கிடைத்ததெல்லாம்

எல்லாருமே என்போல்

சந்தோஷம் தொலைத்த

சாமானியர் தான் என்ற

சந்தோஷம் மட்டுமே!

Wednesday, June 9, 2010

வட்டம்

இதுதான் விதியென்று
யார் சொன்னாலும்
கேளேன்!
எல்லாரும்
செய்வது போல்
ஒருபோதும்
செய்யேன்!

இது இது
இப்படித்தான்
என்பதெல்லாம்
புரிந்ததேயில்லை எனக்கு!
விமர்சனங்கள் எல்லாம்
பாதித்ததேயில்லை என்னை!

அன்னை தந்தை
தம்பி தமக்கை
உறவு பாசம் கூட
உறுத்துவதில்லை
உள்ளத்தை!
காதல் பார்வையிலோ
மனைவியின் அரவணைப்பிலோ
எந்த மாற்றமும்
ஏற்ப்பட்டதில்லை என்னுள்!

தோழமை எல்லாம் கூட
தூரத்தில் தான்!
மழலையின் சிரிப்புகூட
ஒரத்தில் தான்!

என் வட்டத்திற்குள்
விட்டதில்லை யாரையும்!
ஆனால்..
வாழ்வின் ஒரு நாள்கூட
வாழ்ந்ததில்லை நானும்!

Friday, June 4, 2010

புரிதல்

ஊசிதான் வாழ்க்கை

அதன்

சூட்சுமத் துளைக்குள்

நுழைந்து புறப்படும்

நூலாவாய் நீ!

என்றார் துறவி!

சரியா சொன்னீங்க சாமி!

விக்கிற ஊசி

பொறுத்துத் தானே

நம்ம வாழ்க்கை!

என்றான் குறவன்!

Wednesday, June 2, 2010

பெயர் வைத்தல்

இருக்கிற பெயர்  பத்தாதென்று

நிலவுக்கு புதிதாய் பெயர் வைக்க

புறப்பட்டதோர் கும்பல்!

நட்ட நடு நிசியில்

பௌர்ணமி நிலவொளியில்

முதல் கூட்டம்!

பெயர் மட்டும் போதாது

சிலையும் வேண்டும்

என்றதொரு பிரிவு!

அது இது என

ஆலோசித்து முடிவை

அடுத்த கூட்டத்துக்கு

ஒத்தி வைத்தனர்!

அடுத்த கூட்ட நாளோ

அமாவாசையாய்ப் போனது!

நிலவைத் தேடி

ஏமாந்து கலைந்தனர்!

பெயர் வைக்கப் படாமலே

வளர்ந்தது புது நிலா!

Friday, May 14, 2010

மனசு

சர்கஸில் கோமாளி

அந்தர் பல்டி

அத்தனை அடித்தும்

அசரவேயில்லை!

அவனுக்குப் பிடித்த

கிளி விளையாட்டு காட்டும் பெண்

அவனைப் பார்த்திருக்கும்வரை!

 

அந்த கோமாளி

அந்தர் பல்டி

அத்தனை அடித்தும்

சிரிக்கவேயில்லை குழந்தை!

அதற்குப் பிடித்த

ஐஸ்கிரீமை

வாங்கித் தரும்வரை!