பக்கங்கள்

எனக்குள்ளே இருந்து அவ்வப்போது தலை காட்டும் இந்தக் கவிஞன், என்னிலிருந்து மாறுபட்டவன்! அதனால் தான் இது "அபியும் நானும்"!

Labels

Showing posts with label வாழ்க்கை. Show all posts
Showing posts with label வாழ்க்கை. Show all posts

Tuesday, September 21, 2010

தத்துப்பித்து தத்துவம்

என் கனவுகள் எல்லாம்

 கலைந்து போயின!

உணர்வுகள் கூட

உலர்ந்து போயின!

தொட்டால் சுருங்கும் செடியினைப் போல

பட்டு சுருங்கியது எனது உள்ளம்!


விதியா வினையா

இயற்கை விளையாட்டா

எதுவென்றே புரியாமல்

ஏறி இறங்கியது வாழ்க்கை!

அதெல்லாம் சரி!

பள்ளி முடித்த குழந்தை

படிக்கட்டு ஏறுகையில்

இந்தத் தத்துவமெல்லாம்

அவள் தத்துப்பித்துமுன்

தானே வெளியேற

குழந்தையோடு குழந்தையாய் நான்!

Wednesday, August 4, 2010

தந்தை பாசம்



தண்டச்சோறு
ஊர்சுத்தி என்று
சதா சர்வகாலமும்
திட்டினாலும்
நான் எடுப்பேன்
எனத் தெரிந்தே
ஓரம் கிழிந்த அவர்
சட்டையின் பையில்
என் அப்பா வைக்கும்
அந்த நூறு ரூபாய்த்
தாளின் 
வியர்வைக் கரையில்
தெறிக்கிறது
எனக்கும்
என்
தந்தைக்குமான பாசம்!

கவிதை பிடித்திருந்தால் வாக்களிக்க :

Monday, July 26, 2010

ஆயிரம் முகங்கள்!



காதலில் சொன்னால் வர்ணனை!

கவிதையில் சொன்னால் உவமை!

கதையில் சொன்னால் கற்பனை!

விளம்பரம் சொன்னால் விற்பனை!

கோர்ட்டில் சொன்னால் சாட்சி!

படத்தில் பார்த்தால் காட்சி!

அரசியல் சொன்னால் கொள்கை!

அலுவலில் சொன்னால் சாணக்யம்!

வீட்டில் சொன்னால் இல்லறம்!

பத்திரிக்கைக்கு சொன்னால் பேட்டி!

படாடோபத்துக்கு அணிந்தால் உடைகள்!

எல்லையில் குவித்தால் படைகள்!

முகத்தில் பூசினால் பூச்சு!

மேடையில் சொன்னால் பேச்சு!

பொய்முகம் தெரியும்!

ஆனால், இங்கே

பொய்யின் முகங்கள்

ஆயிரம் ஆயிரம்!

Wednesday, July 21, 2010

கூரை




நீ மொட்டு விட்டு
மலரான நேரம் - வீட்டுல
தீ மூட்ட வழியில்ல ! ஆனா
இன்னும் ஒரு பாரம்!


முப்பது வயசு கிட்ட
மூத்தவ காத்திருக்கா!
இருவது வயசு தாண்டி
இளையவ இங்கிருக்கா!
பதினாலு வயசிலயே
பருவம் வந்து சேந்துட்டியே!
எரியுற என் வயித்தில்
எண்ணைய ஊத்திட்டயே!

பலகாரம் செஞ்சிடவே
காசில்லாத நேரத்துல - ஒனக்கு
அலங்காரம் செஞ்சு வக்க
ஆத்தா நான் எங்க போவேன்?
கூரையில மழைத்தண்ணி
தெனம் ஒழுகப் பாத்த வீட்டில்
ஒனக்குன்னு ஒரு கூரை
ஒதுக்க நானும் எங்க போவேன்?

முன்ன ரெண்ட தேத்திடவே
முடியாம போன வீட்டில்
பின்னவளும் சேந்திருக்கா
அப்படின்னா அழைப்பு வைப்பேன்!
அடுத்த வேள சமச்சிடவே
அடுப்பெரியா வீட்டுக்குள்ள
அடுத்தவளும் சமஞ்சுபுட்டா
அப்படின்னா அழைப்பு வப்பேன்?

ஒங்க அப்பன் குடிச்ச தண்ணி
ஒலகத்துக்கே கடன் வைக்க
ஒனக்கு இப்ப மஞ்சத்தண்ணி
ஊத்த நானும் எங்க போவேன்?
பந்தலுக்கு காத்திருக்கா
பாவிமக ரெண்டு பேரும்
கூர வச்சுக் கொண்டாட
கூடலயே எம்மனசும்!

பருவம் வந்த சேதிய
இப்பதிக்கு மறச்சிருவோம்!
 விடியும் தேதி வந்து சேரும் - அப்ப
விஷயத்த வெளிய சொல்வோம்!

Monday, July 19, 2010

கலியாணம் முடிச்சாச்சி!




கைகளிலும் தூக்காமல்

கழற்றியும் எறியாமல்

கால்களை பக்கம் சாய்த்து

கால்விரல் தரை தேய்த்து

எத்தி எத்தி

தத்தி தத்தி

பிய்ந்த செருப்போடு

சப்பாணி நடைபோட்டான்

எங்கள் ஊர் மாடசாமி!


எதிர்வந்த பெருமாள்

சட்டென கேட்டான்

" தச்சித்தான் போட்டாலென்ன

தலையா போகும்?!"

"எனக்கு கண்ணாலம் ஆகி

ஏழெட்டு வருஷமாச்சி!"

அசட்டுச் சிரிப்போடு

மாடசாமி சொல்ல

நமட்டுச் சிரிப்போடு

புரிந்ததாய்

புன்னகைத்தான்

பேச்சுதந்த பெருமாள்!

கல்யாணம் ஆகாத

எனக்கு மட்டும் தான்

எதுவும் புரியவில்லை!

Friday, July 16, 2010

நானும் நடிகனே




விழிகளின் வளைவினில்

விழுந்து புறப்பட்ட துளிகள்

விதையாகிப் பின்

விருட்சமாக....

மேகங்களுக்கிடையில்

சிக்குண்ட வானவில்

சின்னதாய்க் காட்டும்

சாயம்போன சாயல்

எனக்குள்ளும் ஊற...

கைக்குட்டை உதவியில்

கலக்கங்கள் துடைத்து

புன்னகை வில்லை

நாண் போட்டு வளைக்கும்

நானும் நடிகனே!

Wednesday, July 7, 2010

முடிவு



எவ்வளவோ

சோதனை வந்தும்

இறுதியில்

நல்லவனே ஜெயித்தான்!

பணபலம் இருந்தாலும் கூட

லஞ்சம் வாங்கிய

மந்திரி சிறை சென்றார்!

காதலர் இருவரும்

இனிதே இணைந்தனர்!

கெட்டவன் அழிந்ததால்

ஊருக்கே மகிழ்ச்சி!

எதிர்பார்த்த

முடிவுதான்!

ஆனாலும்

ஏகோபித்த

வரவேற்பு!

"சுபம்" என்ற

வார்த்தை பார்த்து

திரையை விட்டு

கண்ணெடுத்தான்

சாமானியன்!

வெளியே

நிஜ உலகம்

எதிர்பாரா முடிவுகளுடன்

அவனுக்காக

காத்திருந்தது!

Monday, July 5, 2010

சொல்லப் போனால்



சொன்னதையே

சொல்லிக் கொண்டிருந்த

குழந்தையும்...

சொல்லாததை

கடைசி வரை

சொல்லாத

பெரிசுகளும்

சொல்லக் கூடாததை

சொல்லி...

சொல்ல வேண்டியதை மறந்த

இளசுகளும்....

இப்படி

சொன்னதும்

சொல்லாததுமாய்

சொல்லாமலே

ஓடிய நொடிகளில்

கரைந்தது

சொல்லிக் கொள்ளும்படியான

விசேஷம்

ஏதுமற்ற வாழ்க்கை!

Thursday, July 1, 2010

வானப் பலகை

நல்ல வேளை

அருகில் இல்லை

வானம்!

தொடுவானம் கூட

தொட முடிவதில்லை!

இல்லையென்றால்

வானப்பலகையிலும்

விளம்பரம்

எழுதியிருக்கும்

இந்த

விற்பனைக் கூட்டம்!

Monday, June 14, 2010

தொலைந்த சந்தோஷங்கள் திரும்பக் கிடைக்கும்!

"தொலைந்த சந்தோஷங்கள்

திரும்பக் கிடைக்கும்!"

விளமபரம் பார்த்து

விரைந்து ஓடினேன்!

சொன்ன இடத்தில்

கடை விரித்திருந்தார்!

அகன்ற அறையில்

ஆயிரம் விளக்குகள்!

அதனடியில் கிடந்தன

தொலைந்த சந்தோஷங்கள்!

பிரபல இதழில்

விளம்பரம் தந்ததால்

கூட்டத்துக்கோ குறைவில்லை!

தெரிந்த தலைகளில் - எனக்குத்

தெரிந்த தலைகளும் அடக்கம்!

என் நண்பரும் உறவுகளும் கூட

தேடிக் கொண்டிருந்தனர்!

என் சந்தோஷத்தை

தேட வந்திருப்பாரோ?

ஒரு கணம் யோசித்து

ஓரக் கண்ணால் பார்த்தேன்!

தத்தம் சந்தோஷத்தை

தேடிக் கொண்டிருந்தனர்!

நானும் இறங்கித்

தேடத் தொடங்க்கினேன்!

என் சந்தோஷம் தவிர

என்னென்னவோ கிடைத்தது!

மற்றவர் சந்தோஷம்

தம் கையில் கிடைத்தால்

அதை மீண்டும் வீசிவிட்டு

தேடல் தொடர்ந்தனர்!

சந்தோஷம் கிடைத்தாலும்

கிடைக்காவிட்டாலும்

தேடுதல் நேரத்தைப் பொறுத்தே

அவரவர் கட்டணம்!

மாலை வரை தேடி

மன்றம் களைத்தது!

மணி அடித்தவுடன்

கூட்டம் கலைந்தது!

ஒருவருக்கு கூட -

தம் சந்தோஷம் கிடைக்கவில்லை!

கிடைத்ததெல்லாம்

எல்லாருமே என்போல்

சந்தோஷம் தொலைத்த

சாமானியர் தான் என்ற

சந்தோஷம் மட்டுமே!

Wednesday, June 9, 2010

வட்டம்

இதுதான் விதியென்று
யார் சொன்னாலும்
கேளேன்!
எல்லாரும்
செய்வது போல்
ஒருபோதும்
செய்யேன்!

இது இது
இப்படித்தான்
என்பதெல்லாம்
புரிந்ததேயில்லை எனக்கு!
விமர்சனங்கள் எல்லாம்
பாதித்ததேயில்லை என்னை!

அன்னை தந்தை
தம்பி தமக்கை
உறவு பாசம் கூட
உறுத்துவதில்லை
உள்ளத்தை!
காதல் பார்வையிலோ
மனைவியின் அரவணைப்பிலோ
எந்த மாற்றமும்
ஏற்ப்பட்டதில்லை என்னுள்!

தோழமை எல்லாம் கூட
தூரத்தில் தான்!
மழலையின் சிரிப்புகூட
ஒரத்தில் தான்!

என் வட்டத்திற்குள்
விட்டதில்லை யாரையும்!
ஆனால்..
வாழ்வின் ஒரு நாள்கூட
வாழ்ந்ததில்லை நானும்!

Friday, June 4, 2010

புரிதல்

ஊசிதான் வாழ்க்கை

அதன்

சூட்சுமத் துளைக்குள்

நுழைந்து புறப்படும்

நூலாவாய் நீ!

என்றார் துறவி!

சரியா சொன்னீங்க சாமி!

விக்கிற ஊசி

பொறுத்துத் தானே

நம்ம வாழ்க்கை!

என்றான் குறவன்!

Friday, May 14, 2010

மனசு

சர்கஸில் கோமாளி

அந்தர் பல்டி

அத்தனை அடித்தும்

அசரவேயில்லை!

அவனுக்குப் பிடித்த

கிளி விளையாட்டு காட்டும் பெண்

அவனைப் பார்த்திருக்கும்வரை!

 

அந்த கோமாளி

அந்தர் பல்டி

அத்தனை அடித்தும்

சிரிக்கவேயில்லை குழந்தை!

அதற்குப் பிடித்த

ஐஸ்கிரீமை

வாங்கித் தரும்வரை!