பக்கங்கள்

எனக்குள்ளே இருந்து அவ்வப்போது தலை காட்டும் இந்தக் கவிஞன், என்னிலிருந்து மாறுபட்டவன்! அதனால் தான் இது "அபியும் நானும்"!

Showing posts with label tamil. Show all posts
Showing posts with label tamil. Show all posts

Tuesday, September 21, 2010

தத்துப்பித்து தத்துவம்

என் கனவுகள் எல்லாம்

 கலைந்து போயின!

உணர்வுகள் கூட

உலர்ந்து போயின!

தொட்டால் சுருங்கும் செடியினைப் போல

பட்டு சுருங்கியது எனது உள்ளம்!


விதியா வினையா

இயற்கை விளையாட்டா

எதுவென்றே புரியாமல்

ஏறி இறங்கியது வாழ்க்கை!

அதெல்லாம் சரி!

பள்ளி முடித்த குழந்தை

படிக்கட்டு ஏறுகையில்

இந்தத் தத்துவமெல்லாம்

அவள் தத்துப்பித்துமுன்

தானே வெளியேற

குழந்தையோடு குழந்தையாய் நான்!

Wednesday, July 21, 2010

இனிய சகாப்தம்



 இது

இனிய சகாப்தம்!

இனிதே நிறைவேறட்டும்!



உன் கண்கள்

அனுப்பிய கடிதங்கள்

என்னை நோக்கி

முகவரி தவறி வந்ததோ  - என்

முகத்தை நோக்கித்தான் வந்ததோ!

தெரியாத போதிலும் - அந்தக்

கடிதங்களின் மீதே - என்

விடியலின் நம்பிக்கைகள்!



காதல் என்ற

கண்ணாமூச்சி விளையாட்டில்

உன் வார்த்தைகளுக்குள்

ஒளிந்திருந்த

அர்த்தங்களைக் கண்டுபிடித்துவிட்டேன்!



ஆனால்

ஒளித்து வைத்தது

நீயா விதியா

என்றுதான் தெரியவில்லை!

ஆனாலும்..

உனக்குள்  ஒளிந்திருக்கும்

என்னை நீ

எப்போது கண்டுபிடிப்பாய்

என்ற

ஏக்கத்தில் நான்!


நீ

காட்டிய கரிசனங்கள்

காதலே! நட்பே! என்று

எனக்குள் நான்

எத்தனையோ

பட்டி மண்டபங்கள்

நடத்திப் பார்த்தாலும்

என் மனம் விரும்புவது

உன் மன மன்றத்தைத் தானே!


நாம்

சேர்ந்திருந்த பொழுதுகளின்

செழுமையான நினைவுகள்

கடற்கரை அலைகளாய்

என் மனகரையை முட்டி மோத

கடலான உன்னில்

கௌரவ மீனவனாய் நான்!

மீன் பிடிக்க வரவில்லை - உனில்

மூழ்குவதற்கு வந்திருக்கிறேன்!


இது இனிய சகாப்தம்!

இனிதே நிறைவேறட்டும்!

Friday, July 16, 2010

அடையாளம்


விரல் நுனி ரேகைகள்

நுழைபவன் அடையாளம்!

இதழ் நுனி இளிப்புகள்

குழைபவன் அடையாளம்!



உருகும் பனிப்போர்வை

உதித்ததின் அடையாளம்!

புரிதலும் புன்னகையும்

மனிதத்தின் அடையாளம்!



அருகாமை நாடல்கள்

அன்பின் அடையாளம்!

நெருடாத ஊடல்கள்

நேசத்தின் அடையாளம்!



புரிகின்ற பொருளெல்லாம்

படைப்பின் அடையாளம்!

புரியாத புதிர்களெல்லாம்

படைத்தவன் அடையாளம்!

நானும் நடிகனே




விழிகளின் வளைவினில்

விழுந்து புறப்பட்ட துளிகள்

விதையாகிப் பின்

விருட்சமாக....

மேகங்களுக்கிடையில்

சிக்குண்ட வானவில்

சின்னதாய்க் காட்டும்

சாயம்போன சாயல்

எனக்குள்ளும் ஊற...

கைக்குட்டை உதவியில்

கலக்கங்கள் துடைத்து

புன்னகை வில்லை

நாண் போட்டு வளைக்கும்

நானும் நடிகனே!

Wednesday, July 14, 2010

பயணம்




உதிரும் இலைகளைப் பார்த்து

மரம் கேட்டது

'என்னை விட்டு

எங்கே போகிறீர்கள் என"



இலைகள் சொல்லின

"நீயல்லவா எங்களை விட்டு

போய்க்கொண்டிருக்கிறாய்!"



பெய்யும் மழைத்துளி பார்த்து

மேகம் கேட்டது

"என்னை விட்டு

எங்கே பொகிறீர்கள் என!"



மழைத்துளிகள் சொல்லின

"நீயல்லவா எங்களை விட்டு

போய்க் கொண்டிருக்கிறாய்!"




ஓடும் நொடிகளைப் பார்த்து

மனிதன் கேட்டான்

'என்னை விட்டு

எங்கே போய்க் கொண்டிருக்கிறீர்கள்" என!

Friday, July 9, 2010

காணாமல் போன கனவுகள்



காணாமல் போன

என் கனவுகளை

யாரேனும்

கண்டெடுத்தால்

அதை

கண்ட இடத்திலேயே

போட்டு விடுங்கள்!

அவை

திருவிழாவில்

தொலைந்த குழநதைபோல்

பெற்ற என்னிடம்

வரத்  துடிக்கும்!

ஆனாலும்

நீங்கள்

அவற்றை

என்னிடம்

சேர்க்காதீர்கள்!

நான்

நிஜமாக்க

முடியாத

கனவுகள் எல்லாம்

மனைவியாக்காத

காதலிகள் போல!

உங்களிடம்

குழந்தை போல்

அழும் கனவுகள்

என்னிடம்

மறந்த காதலியாய்

கேள்வி கேட்கும்!

அதனால்...

கனவுகள்

தொலைந்தே போகட்டும்!

கனவுகளை

கண்ட

இடத்திலேயே

விட்டு விடுங்கள்!

Wednesday, July 7, 2010

முடிவு



எவ்வளவோ

சோதனை வந்தும்

இறுதியில்

நல்லவனே ஜெயித்தான்!

பணபலம் இருந்தாலும் கூட

லஞ்சம் வாங்கிய

மந்திரி சிறை சென்றார்!

காதலர் இருவரும்

இனிதே இணைந்தனர்!

கெட்டவன் அழிந்ததால்

ஊருக்கே மகிழ்ச்சி!

எதிர்பார்த்த

முடிவுதான்!

ஆனாலும்

ஏகோபித்த

வரவேற்பு!

"சுபம்" என்ற

வார்த்தை பார்த்து

திரையை விட்டு

கண்ணெடுத்தான்

சாமானியன்!

வெளியே

நிஜ உலகம்

எதிர்பாரா முடிவுகளுடன்

அவனுக்காக

காத்திருந்தது!

நடுமுள்



அந்தப் பக்கம்

சுழல்கிற கோள்களூம்

நகர்கிற சதுரங்களுமாய்

மாற்றி வைத்தன

வாழ்க்கையை!

இந்தப் பக்கம்

ஒன்பது சுற்றுகளும்

பரிகாரங்களுமாய்

ஏற்றி வைத்தன

வாழ்க்கையை!

ஏற்ற இறக்கங்கள்

பாவங்களிலும்

பரிகாரங்களிலும்

எப்படியோ

நடுமுள் தொட

பாவம்...

ஏறி

இறங்கிய

மனிதன் தான்

கட்டங்களுக்கும்

சட்டங்களுக்கும்

நடுவில்....

ஆடிக் கொண்டே...

வாழ்க்கையின்

நடுமுள் மட்டும்

நழுவிக் கொண்டே...

Monday, July 5, 2010

யார் வந்தது கனவில்?



மீனுக்குட்டி  கனவில்

டோராதான் வந்தாளாம்!

பிரபு வாலு கனவில்

ஜாக்கிசானும் ஷேடோகானும்

அண்ணனின் கனவில்

அசினோ நயனோ!

பாட்டிக்கு

பல்செட் காணாமல்

போனதாகவும்

பின்னால் கிடைத்ததாகவும்

கனவு!

தாத்தாவுக்கு

பகலில் பீடியும்

இரவில் இருமலுமே

வாழ்வாகிப் போனதால்

கனவெல்லாம் கிடையாது!

அம்மாவுக்கு

அட்சய திதியில்

வாங்கிய நகை

குட்டி போடும் கனவு !

அப்பாவிடம்

கனவு பற்றி

கதைப்பதெல்லாம்

கனவுதான்...

அதுசரி

இத்தனை பேரின்

கனவையும்

எதற்காக

உன்னிடம் சொல்கிறேன்

என்றா கேட்கிறாய்?

இவ்வளவும் கேட்டுவிட்டு

என் கனவில்

யார் வந்தார்?

என்று நீ

கேட்காமலா போவாய்!

சொல்லப் போனால்



சொன்னதையே

சொல்லிக் கொண்டிருந்த

குழந்தையும்...

சொல்லாததை

கடைசி வரை

சொல்லாத

பெரிசுகளும்

சொல்லக் கூடாததை

சொல்லி...

சொல்ல வேண்டியதை மறந்த

இளசுகளும்....

இப்படி

சொன்னதும்

சொல்லாததுமாய்

சொல்லாமலே

ஓடிய நொடிகளில்

கரைந்தது

சொல்லிக் கொள்ளும்படியான

விசேஷம்

ஏதுமற்ற வாழ்க்கை!

பார்வை



கண்ணைக் கசக்கி

கைக்குட்டையை

ஈரப்படுத்தி

கண்ணிலிருந்த

அத்தனை தூசியும்

அகற்றி

கண்களை இடுக்கி

உற்று நோக்கியபின்

தெளிவாய்த் தெரிந்தது....

எனக்கு

ஒன்றுமே

தெரியவில்லையென்று!

Thursday, July 1, 2010

பொய்யாவது சொல்

பொய்யாவது சொல்

என்னைக் காதலிக்கிறாய் என்று!

சொல்லியாகிவிட்டதா?

சரி!

என்னது

சொன்னது பொய்யா?

அதெல்லாம்

கிடையாது!

ஆட்டத்தின் விதி

மாறிவிட்டது!

சொன்னது சொன்னதுதான்!

வா, காதலிக்கலாம்!

வானப் பலகை

நல்ல வேளை

அருகில் இல்லை

வானம்!

தொடுவானம் கூட

தொட முடிவதில்லை!

இல்லையென்றால்

வானப்பலகையிலும்

விளம்பரம்

எழுதியிருக்கும்

இந்த

விற்பனைக் கூட்டம்!

Monday, June 14, 2010

தொலைந்த சந்தோஷங்கள் திரும்பக் கிடைக்கும்!

"தொலைந்த சந்தோஷங்கள்

திரும்பக் கிடைக்கும்!"

விளமபரம் பார்த்து

விரைந்து ஓடினேன்!

சொன்ன இடத்தில்

கடை விரித்திருந்தார்!

அகன்ற அறையில்

ஆயிரம் விளக்குகள்!

அதனடியில் கிடந்தன

தொலைந்த சந்தோஷங்கள்!

பிரபல இதழில்

விளம்பரம் தந்ததால்

கூட்டத்துக்கோ குறைவில்லை!

தெரிந்த தலைகளில் - எனக்குத்

தெரிந்த தலைகளும் அடக்கம்!

என் நண்பரும் உறவுகளும் கூட

தேடிக் கொண்டிருந்தனர்!

என் சந்தோஷத்தை

தேட வந்திருப்பாரோ?

ஒரு கணம் யோசித்து

ஓரக் கண்ணால் பார்த்தேன்!

தத்தம் சந்தோஷத்தை

தேடிக் கொண்டிருந்தனர்!

நானும் இறங்கித்

தேடத் தொடங்க்கினேன்!

என் சந்தோஷம் தவிர

என்னென்னவோ கிடைத்தது!

மற்றவர் சந்தோஷம்

தம் கையில் கிடைத்தால்

அதை மீண்டும் வீசிவிட்டு

தேடல் தொடர்ந்தனர்!

சந்தோஷம் கிடைத்தாலும்

கிடைக்காவிட்டாலும்

தேடுதல் நேரத்தைப் பொறுத்தே

அவரவர் கட்டணம்!

மாலை வரை தேடி

மன்றம் களைத்தது!

மணி அடித்தவுடன்

கூட்டம் கலைந்தது!

ஒருவருக்கு கூட -

தம் சந்தோஷம் கிடைக்கவில்லை!

கிடைத்ததெல்லாம்

எல்லாருமே என்போல்

சந்தோஷம் தொலைத்த

சாமானியர் தான் என்ற

சந்தோஷம் மட்டுமே!