Showing posts with label culture. Show all posts
Showing posts with label culture. Show all posts
Monday, July 26, 2010
ஆயிரம் முகங்கள்!
காதலில் சொன்னால் வர்ணனை!
கவிதையில் சொன்னால் உவமை!
கதையில் சொன்னால் கற்பனை!
விளம்பரம் சொன்னால் விற்பனை!
கோர்ட்டில் சொன்னால் சாட்சி!
படத்தில் பார்த்தால் காட்சி!
அரசியல் சொன்னால் கொள்கை!
அலுவலில் சொன்னால் சாணக்யம்!
வீட்டில் சொன்னால் இல்லறம்!
பத்திரிக்கைக்கு சொன்னால் பேட்டி!
படாடோபத்துக்கு அணிந்தால் உடைகள்!
எல்லையில் குவித்தால் படைகள்!
முகத்தில் பூசினால் பூச்சு!
மேடையில் சொன்னால் பேச்சு!
பொய்முகம் தெரியும்!
ஆனால், இங்கே
பொய்யின் முகங்கள்
ஆயிரம் ஆயிரம்!
Wednesday, July 21, 2010
கூரை
நீ மொட்டு விட்டு
மலரான நேரம் - வீட்டுல
தீ மூட்ட வழியில்ல ! ஆனா
இன்னும் ஒரு பாரம்!
முப்பது வயசு கிட்ட
மூத்தவ காத்திருக்கா!
இருவது வயசு தாண்டி
இளையவ இங்கிருக்கா!
பதினாலு வயசிலயே
பருவம் வந்து சேந்துட்டியே!
எரியுற என் வயித்தில்
எண்ணைய ஊத்திட்டயே!
பலகாரம் செஞ்சிடவே
காசில்லாத நேரத்துல - ஒனக்கு
அலங்காரம் செஞ்சு வக்க
ஆத்தா நான் எங்க போவேன்?
கூரையில மழைத்தண்ணி
தெனம் ஒழுகப் பாத்த வீட்டில்
ஒனக்குன்னு ஒரு கூரை
ஒதுக்க நானும் எங்க போவேன்?
முன்ன ரெண்ட தேத்திடவே
முடியாம போன வீட்டில்
பின்னவளும் சேந்திருக்கா
அப்படின்னா அழைப்பு வைப்பேன்!
அடுத்த வேள சமச்சிடவே
அடுப்பெரியா வீட்டுக்குள்ள
அடுத்தவளும் சமஞ்சுபுட்டா
அப்படின்னா அழைப்பு வப்பேன்?
ஒங்க அப்பன் குடிச்ச தண்ணி
ஒலகத்துக்கே கடன் வைக்க
ஒனக்கு இப்ப மஞ்சத்தண்ணி
ஊத்த நானும் எங்க போவேன்?
பந்தலுக்கு காத்திருக்கா
பாவிமக ரெண்டு பேரும்
கூர வச்சுக் கொண்டாட
கூடலயே எம்மனசும்!
பருவம் வந்த சேதிய
இப்பதிக்கு மறச்சிருவோம்!
விடியும் தேதி வந்து சேரும் - அப்ப
விஷயத்த வெளிய சொல்வோம்!
Labels:
culture,
dowry problem,
poverty,
puberty,
ritual,
tamil life poem,
village,
வாழ்க்கை
Subscribe to:
Posts (Atom)
